திங்கள், 22 ஜூலை, 2013

Posted by Chief Editor On PM 5:40

ஒரு நாள் அழகும் அவலச்சணமும் ஒரு கடைகரையில் சந்தித்து கொண்டன 

நாம் இருவரும் சேர்ந்து கடலில் குளிக்கலாமா என்று அழகு கேட்க அவலட்சணமும் ஒப்புகொண்டது. உடைகளை கடற்கரையில் வைத்துவிட்டு குளிக்க சென்றன.

சிறிது நேரம் கழித்து குளித்தது போதும்னு அவலட்சணம் கரையேறியது, அங்கிருந்த அழகின் உடைகளை அணிந்தது கொண்டு அவலட்சணம் தன் வழியே சென்றது

பின்னர் குளித்து திரும்பிய அழகு தன் உடைகளை காணமல் தவித்து போனது. ஆடையில்லாமல் தெருவில் போக கூச்சமாக இருந்தது, எனவே வேறுவழி இல்லாமல் அவலச்சணத்தின் உடைகளை அணிந்து கொண்டு சென்றது.

அன்று முதல் இன்று வரை உலகத்தில் பலரும் ஆடையை வைத்து அழகையும் அவலச்சணத்தையும் தவறாக முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர், நிஜமான அழகை அடைந்தவர்கள், அதன் அசிங்கமான ஆடைகளை பார்த்து முகம் சுளித்து அதை ஒதுக்கி விடுகிறார்கள். வேறு சிலர் அழகின் உடைகளில் மயங்கி அவலச்சணத்தை கொண்டாடிகொண்டிருகிரார்கள்.
Posted by Chief Editor On PM 5:31

ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒரு நாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு மூங்கில் வெட்டச் சென்றார்.

பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.

மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான். “”நாம அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா வெட்டுற மூங்கிலை எல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்” பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.

அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார். “”அப்பா…அப்பா… ” என்றான் பையன். “”என்னடா?” கோபத்துடன் கேட்டார். “இந்தக் காட்டாறு எங்கே போகுது?” “”நம்ம வீட்டுக்குத்தான்”

பையன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவில்லை. மாலை நேரம் ஆனது. மூங்கில் வெட்டுபவர் பையனின் கையைப் பிடித்துக் கொண்டு “”வா, போகலாம். நான் வெட்டிய மூங்கிலையெல்லாம் எங்கே அடுக்கி வைச்சிருக்க?” என்று கேட்டார்.

பையன் சொன்னான்: “”நீங்க வெட்டினதை எல்லாம் ஆற்றிலே போட்டுட்டேன். இந்நேரம் அது நம்ம வீட்டுக்குப் போயிருக்கும்..!’ ன்னும் பொறுமையா பதில் சொன்னான் செல்ல மகன்.

இளம் வயது குழந்தைகளுக்கு சொல்லுவதை திருந்த சொல்லுங்கள். சரியாக சொல்லுங்கள்.
Posted by Chief Editor On PM 5:27

ஒரு ஹெலிகாப்டரில் இருந்து வந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு 9 ஆண்களும், 1 பெண்ணும் தொங்கிக் கொண்டிருந்தனர்.

இதில் யாராவது ஒருவர் கையிறை விட்டால் மட்டுமே ஹெலிகாப்டர் மேற்கொண்டு பறக்க முடியும். இல்லை என்றால் கயிறு அறுந்துவிடும்.

இந்த நிலையில், ஹெலிகாப்டரில் இருந்து யாராவது ஒருவர் தனது உயிரை தியாகம் செய்யுமாறு கோரிக்கை குரல் வருகிறது.

ஆனால், ஆண்களில் யாருமே உயிரை தியாகம் செய்ய முன்வரவில்லை.

அந்த சமயத்தில், அவர்களைக் காப்பாற்ற அந்த பெண் தானே முன் வந்து கயிறை விடுவதாகக் கூறுகிறாள்.

அவள் கயிறை விடுவதற்கு முன்பு, என் குடும்பத்துக்காக நிறைய தியாகம் செய்துள்ளேன். அதுபோல் இன்று உங்களுக்காக இந்த தியாகத்தைச் செய்கிறேன் என்று கூறினாள். இதைக் கேட்ட அனைத்து ஆண்களும், தங்களை மறந்து கைதட்டினர்.

பிறகென்ன... அந்த பெண் மட்டும் மீட்கப்பட்டு தனது இடத்தை அடைந்தாள்.
Posted by Chief Editor On PM 5:19

'இந்த மாசம் தாத்தா நம்ம வீட்டுக்கு வரலையாப்பா?’
ஆசையோடு கேட்டான் அமுதன்.

“அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க பெரியப்பா
தாத்தாவை இங்கே கொண்டு வந்து விட்ருவாருடா…
கவலைப்படாதே!’ குதர்க்கமாய்ப் பதில் சொன்னாள் உஷா,
என் மனைவி.

அப்போது என் அலைபேசி மணி ஒலித்தது. “எடுங்க…. உங்க
அண்ணனாய்த்தான் இருக்கும்! ‘ உஷாவின் யூகம் சரிதான்.
அண்ணன்தான் அழைத்தார்.

“வணக்கம்ண்ணே, கோபுதான் பேசுறேன்… சொல்லுங்க’ என்றேன்.
“என்னடா, அப்பாவை அழைச்சிட்டுப் போகலையா?’ அண்ணன்
கேட்டார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. அண்ணி தொந்தரவு
செய்திருப்பாள்.

“கொஞ்சம் வேலையாப் போய்டுச்சிண்ணே… இன்னும் ஒரு மணி
நேரத்துல வந்திடுறேன்’ இணைப்பை துண்டித்தேன். புறப்பட
ஆயத்தமானேன்.

“அப்பா, எனக்கொரு சந்தேகம்’ என்றான் அமுதன். “என்னடா
சந்தேகம்?’ “தாத்தாவுக்கு நீ, பெரியப்பான்னு ரெண்டு பிள்ளைங்கள்…
தாத்தாவை மாறி மாறி வச்சுக்கிறீங்க… உனக்கு நான் ஒரே பிள்ளை…
உனக்கு வயசாய்ட்டா ஒரு மாசம் நான் வச்சுக்குவேன்…. அடுத்த
மாசம் நீ எங்கே போவே?’
என்னை யாரோ பிடரியில் ஓங்கி அறைந்ததுபோல உணர்ந்தேன்.

நன்றி: குமுதம்

வெள்ளி, 19 ஜூலை, 2013

Posted by Chief Editor On AM 2:12

பன்றி, பசுவிடம் தன் ஏக்கத்தைக் கூறியது,''நான் எவ்வளவு தான் செய்தாலும் மக்கள் உன்னைத்தான் புகழ்கிறார்கள்.

நீ பால் தந்தாலும்,நான் அதை விட அதிகமாக என் மாமிசத்தையும் கொழுப்பையும் தருகிறேன். இருந்தும் என்னை யாரும் விரும்ப மாட்டேன் என்கிறார்கள் .

பசு கூறியது , 
"நீ கூறுவது உண்மையே. அதன் காரணம், நான் கொடுப்பவற்றை உயிருடன் இருக்கும் போதே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.''

ஞாயிறு, 14 ஜூலை, 2013

Posted by Chief Editor On AM 9:34

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது
மாதத்திலிருந்துஉரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால்அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவைமொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.

திங்கள், 8 ஜூலை, 2013

Posted by Chief Editor On AM 10:31

ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால்
அம்மாவை மாற்ற தேவையில்லை
ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம்
ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.

காலை வணக்கம் வார்த்தை எல்லாம்
கடல் கடந்து சென்றது
Good Morning என்ற வார்த்தையில் தான்
பல குடும்பம் விழிக்குது.

அந்நிய உணவில் தனி ருசிதான்
அதில் ஒன்றும் தவறில்லை
ஆயின் வறண்ட ரொட்டியை
திண்ணக் கூட வறட்டு கவுரவம் என்ன?

பத்து வரியை படிக்க சொன்னால்
பல்லை இளித்து காட்டுவார்
ஆயினும் ஆங்கில நாளிதழ் வாங்கி
வைத்து அறிவாளி வேடம் போடுவார்.

முறுக்கும் சீடையும் கையில் தந்தால்
அலட்சியம் செய்து போவார்.
ஒரு Kurkure'வை வாங்கி கொண்டு
கோமான் போல திரிவார்..

நாகரீக பெண்கள் நடக்கும் விதத்தில்
அலப்பறை அதிகமாய் மின்னும்
நாலு வரி பேச தெரிந்துவிட்டால்
மனதில் சேக்சுபியர் என்று எண்ணம்.

பாரதி கவிதை பைந்தமிழ் நூலை
புரியாதவர் போல படிப்பார்..
Harry Potterஐ வாங்கி வைத்து
மேதாவி போல நடிப்பார்..

நண்பா தோழா என்பதை
பழமை சாயம் பூசுவார்
Bro Dude என்பதை எல்லாம்
புரியாமலே பேசுவார்

அன்பெனும் அம்மா
Mummy ஆனது
அழகிய தமிழ்மொழி
Dummyஆனது
ஆங்கிலம் என்பது
பெருமையானது.
நீங்கள் அலட்டிக்கொள்வது
மடமையானது.

அரசியலில் தான் விடுதலை பெற்றோம்
நம் அடிமை தனம் இன்னும் போகவில்லை
வளர்ச்சிக்கு தான் ஆங்கிலம்
அதை கவர்ச்சியாய் காட்டத் தேவையில்லை.

பெருமைக்கு பேசுவதை
குறைத்து கொள்ளுங்கள்.
நம் பெருமை எல்லாம்
தமிழ்தான் உரைத்து சொல்லுங்கள்.

- வை . நடராஜன்
Posted by Chief Editor On AM 10:17
தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன் என்றது. என்னது? நான் அழகா? ஆமாம். நீ செம அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற முல்லுதான் உன் அழகை கெடுக்குது, என்றது ஓநாய்

ஆனா, அதுதானே என்னைப் பாதுகாக்குது என்றது முள்ளம்பன்றி, உண்மைதான். ஆனா, அதை எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாயிடுவே, யாருக்கும் உன்னை கொல்லனும்னு மனசே வராது. ஓநாயின் பசப்பு வார்த்தையில் மயங்கிய முள்ளம்பன்றி, தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது.

இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா? என்று கேட்டது. அழகாய் மட்டும் இல்லை, அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு, என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய்.

நீதி: "வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே"
Posted by Chief Editor On AM 10:06
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.

வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார்

சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.

ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...?
Posted by Chief Editor On AM 10:00
ஒரு பக்தர், கடவுளை நினைத்துத் தவம் இருந்தார். பல நாள் கழித்துக் கடவுள் அவர்முன்னே தோன்றினார். ‘பக்தா,உன் தவத்தை மெச்சினோம், என்ன வரம் வேண்டும், கேள்!’ 

பக்தருக்கு உடம்பெல்லாம் பரவசம். கடவுளுக்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு, ‘நிறைய செல்வம் வேண்டும்!’ என்றார். 

அப்படியே ஆகட்டும்!’ என்று ஆசிர்வாதம் செய்தார் கடவுள். மறுவிநாடி, அவரைக் காணவில்லை. ஆனால், செல்வமும் கிடைக்கவில்லை! பக்தர் குழம்பிப்போனார். ஒருவேளை, நாளைக்குக் கிடைக்குமோ என்று யோசித்தபடி வீட்டுக்கு வெளியே வந்து திண்ணையில் உட்கார்ந்தார். எதேச்சையாகத் தெருவைப் பார்த்தால் அங்கே ஒரு பெட்டி கிடந்தது. அக்கம்பக்கத்தில் யாரையும் காணோம்! ஆச்சர்யத்தோடு அந்தப் பெட்டியை நெருங்கினார் பக்தர். திறந்துபார்த்தார், உள்ளே முழுவதும் தங்கம், வெள்ளி, வைர நகைகள்! 

அவர் படாரென்று பெட்டியை மூடினார். அதை வீட்டுக்குள் கொண்டுவந்தார். ’ஒருவேளை, இதுதான் கடவுள் சொன்ன செல்வமாக இருக்குமோ?’ ம்ஹூம், இது அநேகமாக யாரோ திருடிய சொத்து. நான் இதை விற்றுப் பணமாக்க முயற்சி செய்தால் போலிஸ் என்னைப் பிடித்து உள்ளே போட்டுவிடும்!’ என்றும் அவருடைய உள்மனது சொன்னது. இந்த விஷயத்தில் தெளிவான ஒரு முடிவெடுக்கமுடியாமல் திணறினார்.

அடுத்த ஒன்றிரண்டு நாள்கள் அவர் கவலையோடு சுற்றிக்கொண்டிருந்தார். கடைசியில் பிரச்னையே வேண்டாம் என்று அந்தப் பெட்டியைக் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டார். அன்று மாலை, அவர் தியானத்தில் அமர்ந்தபோது, கடவுள் அவர்முன்னே தோன்றினார். ‘பெட்டி நிறைய செல்வம் அனுப்பினேனே, பெற்றுக்கொண்டாயா?’ என்று கேட்டார். 

அச்சச்சோ! அது நீ அனுப்பினதா? சொல்லவே இல்ல!’ என்றார் பக்தர். ‘அதைப் போலிஸ்ல கொடுத்துட்டேனே!’ 

நீதான் அந்தப் பெட்டி கைக்கு வந்தபிறகு தியானமும் செய்யவில்லை, தவமும் செய்யவில்லை, ஒரு நிமிஷம் கண் மூடி நிற்கக்கூட இல்லை!’ என்று சிரித்தார் கடவுள். ‘செல்வம் கிடைப்பதற்கு முன்னால் மாதக்கணக்கில் தவம் செய்து என்ன புண்ணியம்? அது கிடைத்தபிறகு ஏற்பட்ட குழப்பத்தை உன்னால் தீர்க்கமுடியவில்லையே!’ 

மன்னிக்கவேண்டும் கடவுளே, இப்போது நான் என்ன செய்வது?’ புலம்பிய பக்தருக்குப் பதில் சொல்லக் கடவுள் அங்கே இல்லை!

தியானத்தை ஒரு வாழ்க்கை முறையாகக் கருதுவதுதான் ஜென். அப்படியில்லாமல் கடவுளிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்கான சாதனமாக அதை உபயோகித்தால் இதுபோன்ற விபரீதங்களைத் தவிர்க்கமுடியாது!

புதன், 3 ஜூலை, 2013

Posted by Chief Editor On AM 9:40
என்மேல் எந்த தவறும் இல்லை. ஆனால், ராமன் அண்ணா என்னைப் பற்றி என்ன நினைத்திருக்கிறாரோ! நான் தனியாகப் போனால், "இவனால் தானே நாம் காட்டுக்கு வந்தோம்' என தப்பாக எண்ணுவாரோ என்னவோ! எனவே, எல்லா ரிஷிகளும் என்னுடன் வரணும்,'' என்று கேட்டுக் கொண்டான் பரதன். ரிஷிகளும் அவனுடன் சென்றார்கள். இந்த சம்பவத்தை ஒரு கதையுடன் ஒப்பிடுவார்கள்.

ஒரு விவசாயி தன் நிலத்துக்கு போகும் வழியில், பாம்பு படமெடுத்து நின்றது. சாதாரணமாக, மற்றவர்கள் தடியை எடுத்து அடிக்க ஓடியிருப்பார்கள், அல்லது பயந்து பின் வாங்கியிருப்பார்கள். ஆனால், இவரோ கீழே விழுந்து வணங்கினார். 

""நாகராஜா! நீ தான் என் நிலத்துக்கு காவல் தெய்வம். உன்னால் தான் எனக்கு அமோகமான மகசூல் கிடைக்கிறது போலும்! தொடர்ந்து இங்கேயே இரு,'' என்றார். பாம்பு தலையைத் தாழ்த்திக் கொண்டு, அருகில் இருந்து புற்றுக்குள் போய்விட்டது. அடுத்தநாள், விவசாயி பால் செம்புடன் வந்தார். புற்று அருகே வைத்து, ""நாகராஜா, பசியாறிக் கொள்,'' என்றார். பாம்பு வெளியே வந்தது. பாலைக் குடித்தது. போய் விட்டது. விவசாயி, செம்பை எடுத்துப் பார்த்தார். அதற்குள் ஒரு தங்கக் காசு கிடந்தது.

இதேபோல், ஒவ்வொரு நாளும் விவசாயி பாலை வைக்க, பாம்பும் குடித்து விட்டு காசைப் போட, இவர் பணக்காரராகி  விட்டார். ஒருமுறை, அவர் வெளியூர் செல்ல வேண்டி வந்தது. மகனை அழைத்து, ""நான் திரும்பி வரும் வரை, பாம்புக்கு பால் வை,'' என்று சொன்னார்.

மகனும் பால் வைக்கச் சென்றான். செம்பை எடுத்துப் பார்த்த போது, தங்கக்காசு இருந்தது. மறுநாள், பால் வைத்தான். அப்போதும் காசு இருந்தது. அப்போது, அவன் மனதில் விபரீத எண்ணம் பிறந்தது.

"இந்தப் பாம்பு புற்று நிறைய காசு வைத்திருக்கிறது. கஞ்சப்பாம்பு, தினமும் ஒன்றே ஒன்றை போடுகிறது. புற்றை உடைத்து விட்டால் எல்லாக் காசையும் ஒரேநாளில் எடுத்துக் கொள்ளலாம். பாம்பைக் கொன்று விட வேண்டியது தான்,'' என்று, மறுநாள் அது பால் குடித்துக் கொண்டிருந்த வேளையில், தடியை தூக்கி அடித்தான். இவனுக்கு கெட்ட நேரம் தலையில் விழ வேண்டிய அடிவாலில் விழ, கொதித்தெழுந்த பாம்பு அவனைத் தீண்டிவிட்டது. அவன் இறந்து போனான். திரும்பி வந்த விவசாயி, ரொம்பவும் வருத்தப்பட்டார்.

ஆனாலும், பாம்புக்கு துன்பம் செய்ததால் தானே மகன் <உயிரிழந்தான் என்ற <உண்மையைப் புரிந்து கொண்டார். மறுநாளேபால் செம்புடன் புற்றுக்கு சென்றார். ஆனால், பாம்பு அதைக் குடிக்கவில்லை.
""நீர் இத்தனை நாளும் எனக்கு சேவை மனப்பான்மையுடன் பால் வைத்தீர். இனிமேல், நம் மகனைக் கொன்ற பாம்பு தானே என்ற எண்ணத்தையும் சுமந்து கொண்டு தான் பால் வைப்பீர். எனவே, இனி இதைக் குடிக்கமாட்டேன்,'' என சொல்லிவிட்டு போய்விட்டது.

தன் மகனைக் கொன்ற பாம்பு பற்றி விவசாயி தப்பாக நினைக்கவில்லை. ஆனாலும், பாம்பு அவர் மீது சந்தேகப்பட்டது. அதுபோல், ராமனும் பரதனை தவறாக நினைக்கவில்லை. ஆனால், அண்ணன் தப்பாக நினைத்து விட்டால் என்ன செய்வது என்று பயந்தே, பரதன் மகரிஷிகளின் துணையோடு சென்றான்.

ஒரு குடும்பத்தில் ஒருவர் நமக்கு செய்த துன்பத்துக்காக, ஒட்டுமொத்த குடும்பத்தையே வெறுக்கக்கூடாது. அந்தக் குடும்பத்திலும் நல்லவர்கள் இருப்பார்கள். எல்லாரையும் தவறாக நினைக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள்.